ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரிய ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி…!!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரிய ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இந்த படங்களில் தங்களுடைய குடும்பத்தினர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, தீபா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வு விசாரித்தது. ‘தலைவி’ என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தீபா ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தலைவி பட இயக்குனர் விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த கதை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்து உள்ளதாகவும் எதிர்கால சந்ததியினர் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இந்த படத்திற்கு தடை கேட்க தீபாவுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார். தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

இயக்குனர் விஜய் தரப்பு வழக்கறிஞர், படத்தை சென்சார் போர்டு பார்த்து தணிக்கை செய்யும் என்று தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், தலைவி, குயின், ஜெயா படங்கள் வெளியாக தடை விதிக்க முடியாது என கூறி, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, தீபாவின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version