பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து இன்று இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து திரைப்படம் இயக்கப்போகும் வெற்றி இயக்குனர் அட்லீ இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இயக்குனர் ஷங்கரின் நண்பன் மற்றும் ரோபோ திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா என்னும் இளமை பட்டாளங்களை வைத்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
திருமணத்திற்கு பிறகான காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அழகான காதல் கவிதையாகவே இருந்தது. பெற்றோர்களுக்காக விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஜான் – ரெஜினாவாக ஆர்யா நயன்தாரா அவர்களுக்குள் இருக்கும் பசுமையான நினைவுகளாக இருக்கும் காதலன் காதலி சூர்யா – கீர்த்தனா.
ஜெய் – நஸ்ரியா கேரக்ட்டர்கள் சில நிமிடங்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இன்றும் அழியா நினைவுகளாகவே உள்ளது. சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நயன்தாராவுக்கு இந்த திரைப்படம் தான் ரீ என்ட்ரி. சிறந்த வசனத்திற்காக மாநில விருதும், சிறந்த புதுமுக இயக்குனருக்கான எடிசன் விருதும் இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
இன்றும் தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் போது அதை கேலி செய்தாலும் முழு திரைப்படத்தையும் பார்த்து முடிக்கும் நம்மை போல் ரசிகர்கள் தான் அட்லீயின் முதல் வெற்றிக்கான காரணம்.
தளபதியுடன் அட்லீயின் ஹாட்ரிக் வெற்றி:
தளபதி விஜய், அட்லீக்கு கொடுத்த வாய்ப்பு இனி வரும் இளம் இயக்குனர்களுக்கு யாரும் கொடுப்பார்களா என தெரியவில்லை. இவர்கள் கூட்டணியில் வந்த மூன்று படங்களுமே ரசிகர்களை தெறிக்கவிட்டு, மெர்சலாக்கி, பிகில் அடிக்க வைத்தது.
2016 ஆம் ஆண்டு முதன் முதலாக தளபதி விஜய் அட்லீயின் கூட்டணியில் தெறி படம் வந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திடாத மிடுக்கான போலீஸ் அதிகாரியாக விஜய், அழகு தேவதைகளாக சமந்தா – ஏமிஜாக்சன், வில்லனாக இயக்குனர் மகேந்திரன், விஜய்யின் அம்மாவாக ராதிகா, மகளாக நைனிகா, என தியேட்டரை தெறிக்கவிட்டது திரைப்படம். சிறந்த இயக்குனருக்கான SIIMA விருதையும், IIFA உட்சவம் விருதையும் பெற்றது தெறி திரைப்படம்.
இதுவரை தமிழ் சினிமாவில் அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் விதிமுறைகளையும் மறைமுகமாகவே விமர்சித்து வந்து கொண்டிருந்த நிலையில், தளபதியின் மெர்சல் மற்றும் சர்க்கார் நேரிடையாகவே விமர்சனங்களை கொண்டு வந்தது.
இதில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் இதுவரை யாரும் எடுத்து பேசிடாத துறை, மருத்துவ துறையை பற்றி நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அன்றைய நிலையில் அமலாக்கப்பட்டிருந்த GST பற்றி நேரிடையாக விமர்சித்தது.
ஆளப்போறன் தமிழன் பாடல் உலகமெங்கும் அதிர்ந்து பல சாதனைகளை படைத்தது. பல எதிர்ப்புகளை தாண்டி படம் திரையிடப்பட்டு வெற்றி கண்டது. இந்த திரைப்படத்திற்கும் சிறந்த இயக்குனருக்கான விஜய் அவார்ட் விருதையும், SIIMA விருதையும் அட்லீ பெற்றார்.
பெண்களுக்கான கால்பந்து போட்டியை மையமாக வைத்து2019 ஆம் ஆண்டு அட்லீ – விஜய் கூட்டணியில் பிகில் திரைப்படம் வெளிவந்தது. பிகில் திரைப்படத்திற்கு மேலாக பேசப்பட்டது பிகில் இசை வெளியிட்டு விழா தான். தளபதி மற்றும் அட்லீயின் பேச்சுக்கள் அனல் தெறித்தது. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களிலேயே சில நாட்களாக நடித்து கொண்டிருந்த நயன்தாரா சற்று அதிலிருந்து விலகி விஜயுடன் கைகோர்த்தார். தெறி, மெர்சல் வரிசையில் பிகிலும் பட்டை கிளப்பியது. சிங்கப்பெண் பாடல் ஆளப்போறன் தமிழன் பாடலுக்கு ஈடு கொடுத்து ஹிட் அடித்தது.
அட்லீ எடுத்த நான்கு படங்களுமே அடுத்தடுத்து ஹிட் அடித்து அவரை வெற்றி இயக்குனர் வரிசையில் அட்லீயை அமர்த்தியது.
இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்க்கான் தனது 54 வது பிறந்தநாள் அன்று தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். மொத்த இந்திய சினிமா உலகமே அட்லீ யாரென்று திரும்பி பார்த்தது, ஆம் ஏனென்றால் இம்முறை ஷாரூக்கின் அடுத்த திரைப்படம் பாலிவுட்டில் இல்லை, நம்ம கோலிவுட்டில் நம் மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில். இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து இயக்க போகும் தமிழ் இயக்குனர் நம் பிறந்தநாள் நாயகன் அட்லீ தான்!
ஒருவனின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் வருகிறது என்றாலே அவன் வெற்றிபடிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்கிறான் என்றே அர்த்தம். அது அட்லீயின் விஷயத்தில் உண்மை அட்லீயின் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனால் விமர்சகர்களால் அவர் வெற்றியை என்ன அவர் முகத்தில் இருக்கும் வசீகரமான சிரிப்பை கூட மாற்ற முடியவில்லை. அவரது திரைக்கதைகள், திருமணவாழ்கை, நிறம் என எவ்வளவு அடிமட்டத்திற்கு சென்று விமர்சித்தாலும் அத்தனை மீம்ஸ்களையும் கீழே போட்டு அதன் மீது ஏறி வெற்றி கோட்டையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் நம் இயக்குனர் அட்லீக்கு செய்திஅலையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.