கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை தமன்னாவுக்கு, நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ரூத் பிரபு உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை தமன்னா பாட்டியா. இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக நடிகை தமன்னா கூறும்போது, “கொரோனா பாதிப்பு இருப்பதால் கவனமாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் நானும், என்னுடைய குழுவும் மிகக் கவனமாக இருந்தும் கூட, ஒரு வாரத்துக்கு முன்பு நான் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். தேவையான பரிசோதனைகளை செய்தபிறகு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்தது.
எனவே ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் என்னை நானே அனுமதித்துக்கொண்டேன். மருத்துவர்களின் உதவியுடன் இப்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். இருந்தாலும், சில காலத்துக்கு என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க முடிவெடுத்திருக்கிறேன். கடுமையான காலத்தை கடந்து வந்தாலும், இப்போது நல்லபடியான உணர்வு ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய நலனில் எப்போதும் அக்கறை கொண்ட நல்ல உள்ளத்தினர் அனைவருக்கும் எனது நன்றி”என்றார்.
இந்நிலையில் கொரோனாவிலிருந்து போராடி வெளியே வந்துள்ள தமன்னாவுக்கு, நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முன்பைப் போலவே சினிமாவுக்கு அவர் திரும்பி வரவேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.