எனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்று தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வரும் நடிகை ஹரிப்பிரியா கூறினார்.
சான்டல்வுட் என்று அழைக்கப்படும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களது தோழர்கள் என 14 பேரை கர்நாடகா போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவில் கன்னட நடிகை ஹரிப்பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, “எனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. நான் ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்துதான் கன்னட நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் செய்தியை தெரிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது.
நான் இதுவரை எந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கும் இதுவரையில் சென்றதில்லை. போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவர்களின் பெயர்களை போலீஸார் வெளியிட வேண்டும். நான் மிகுந்த பாதுகாப்பாக இருந்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். தற்போது திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். விரைவில் ஷூட்டிங் செல்லவுள்ளேன்” என்றார்.