சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து, ரூ.2.5 கோடியை கல்வி ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியான போதே,
திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்தளிக்கப்படும் என சூர்யா குறிப்பிட்டு இருந்தார். அதன் முதற் கட்டமாக 1.5 கோடி ரூபாய் திரையுலகினருக்கு வழங்கி இருந்தார்.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள், திரைத்துறையினர், கொரோனா தொற்றிலிருந்து’ மக்களைப் பாதுகாக்கச் செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் விற்பனைத் தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம். அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு’ பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறு பங்களிப்பாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டு அதில் 1.5 ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அடுத்தபடியாக திரையுலகைச் சார்ந்த விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
‘கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்’ என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என சூர்யா தெரிவித்துள்ளார்.