இரண்டு வருடங்கள் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்க, நீண்ட காலம் கழித்து தற்போது தான் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனாலும் தியேட்டரில் பெரிய ஹீரோக்கள் படங்கள் வராததால், மக்கள் கூட்டம் வரவில்லை. தற்போது சிவாகார்த்திகேயனின் #டாக்டர் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில் கோரோனாவிற்கு பிறகு, முதல்முறையாக ஹவுஸ்ஃபுல் காட்சிகள் நிறைந்துள்ளது. ஆனால் டாக்டர் பட வெளியீட்டிற்காக, தனது சம்பளத்திற்கும் அதிகமான தொகையான, தனக்கு சம்பந்தமில்லாத பணப்பிரச்சனையில் 25 கோடியை அவர் ஏற்றுக்கொண்டதால் மட்டுமே டாக்டர் படம் வெளிவந்திருக்கிறது.
டாக்டர் திரைப்படம் இன்று 9தேதி வெளியாக இருந்த நிலையில், நேற்று திடீரென இப்படத்தின் தயாரிப்பாளரான KJR ஸ்டூடியோஸ் ஃபைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியது. ஃபைனான்ஸியர் ஜஸ்வந்த் பண்டாரிக்கு KJR ஸ்டூடியோஸ் 25 கோடி தர வேண்டியது இருந்தது. இதை தந்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும். சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை முதல் காப்பி அடிப்படையிலேயே தயாரித்து அளித்திருந்தார். ஆனால், தயாரிப்பாளாரின் பழைய படங்களுக்கு ஃபைனான்ஸ் பிரச்சனையால் பிரச்சனைக்குள்ளானது என்கிறார்கள். இந்த விவாகரத்தில் நேற்று தனியார் ஹோட்டலில் பெரிய முக்கிய புள்ளிகள் பங்குகொள்ள நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடைசி வரை இந்தப்பிரச்சனையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தப்பிரச்சனையில் அநியாயமாக சிக்கிக்கொண்டவர் சிவகார்த்திகேயன் தான். தயாரிப்பாளர்கள் முந்தைய படப்பிரச்சனையிலும் டாக்டர் படத்திற்காக வாங்கிய கடனிலும் படம் சிக்கிக்கொண்டது. டாக்டர் படத்தை மிகுந்த கனவுடன் உருவாக்கி, 2 வருடம் காத்திருந்து ரசிகர்களுக்காக திரைக்கு கொண்டு வரும் நேரத்தில், இந்தப்பிரச்சனை தீர வாய்ப்பில்லை என்ற நிலையில் அவர் இதில் தலையிட வேண்டி வந்தது. அவர் இந்த பஞ்சாயத்திற்காக அவர் நடித்து வரும் #டான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுக, அவர்கள் மதுரை அன்புவை இந்தப்பிரச்சனையை தீர்த்துவைக்க பேச்சுவார்த்தை நடத்த சொன்னார்கள். இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையில் இறுதியில் தயாரிப்பாளர் தர வேண்டிய, 25 கோடியை 3 நாளில் திருப்பி தருவதாக மதுரை அன்புபின் சிபாரிசில் அதிகாலை 4.30 மணியளவில் முடிக்கப்பட்டு இன்று படம் வெளியாகியுள்ளது.
பெரிய நடசத்திரங்களின் படங்கள் தான் திரையரங்கிற்கு மக்கள் கூட்டத்தை இழுத்து வருகின்றன , அவைதான் ஒரு வகையில் தியேட்டர்களை வாழவைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு பெரிய நட்சத்திரங்கள் படங்கள் மீண்டும் மீண்டும்.. ஃபைனான்ஸ் பிரச்சனையில் படத்தை வெளியிட முடியாத நிலை உருவாக்கப்பட்டு, பஞ்சாயத்து மூலம் மட்டுமே படம் வெளியாகும் நிலை இருந்து வருகிறது. நடிகர் சூர்யா, விஜய், விஜய் சேதுபதி என சமீப காலங்களில் இந்தப்பிரச்சனையில் சிக்காத நடிகர்களே இல்லை எனலாம். ஒரு பெரிய நடசத்திரத்தின் வியாபார மதிப்பை வைத்தே ஒரு படம் வியாபரம் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு படம் வெளியாக தன் சம்பளத்தை விட அதிகமான தொகையை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்து வருகிறது. தயாரிப்பாளர்கள் கவனமுடன் செயல்படாதவரை இந்த பிரச்னை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.