கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் மாடல் காரை ரீகால் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்கப்பட்ட தங்களது வாகன மாடல்களில் ஏதேனும் ஒரே மாதிரியான கோளாறை கண்டறியும்போது, பயனாளர்களுக்கு தகவல் தெரிவித்து வாகனத்தில் உள்ள கோளாறை சரி செய்வது என்பது வழக்கம். பல முன்னணி நிறுவனங்களும் கூட, அவ்வப்போது இந்த ரீகால் அழைப்பை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்யுவி டீசல் யூனிட் மாடல் கார்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கியா செல்டோஸ் டீசல் யூனிட்கள் ரீகால் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், எத்தனை யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை.
இதுபோன்ற, ரீகால் அழைப்புகள் பெரும்பாலும் சிறிய அளவிலான கோளாறுகளை சரிசெய்யவே வெளியிடப்படும். கியா மோட்டார்ஸ் நிறுவனமும், குறிப்பிட்ட கார் வேரியண்ட்டில் பியூவல் பம்ப்பில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்யப்படுவதற்கான காரணமாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களின் செல்டோஸ் டீசல் வேரியண்ட்டை அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் கொண்டு சென்று காரை சரி செய்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த கோளாறு இலவசமாக சரி செய்து வழங்கப்படுகிறது.