வாகன காப்பீட்டுத் திட்டத்தை ஏன் கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதற்கான, விவரங்களை பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடம்பரமாக காணப்பட்ட வாகனங்கள், இப்போது மனிதனின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது. அவரவர் வருவாய்க்கு ஏற்றார்போல், இருசக்கர அல்லது நான்கு சக்கரம் என தங்களுக்கான வாகனங்களை பொதுமக்கள் சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், கார் அல்லது பைக் என எந்த வாகனத்தை வாங்கினாலும், பயனாளர் முதலில் அதற்கான காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேற்கொள்வது அவரவர் விருப்பமாக இருந்தாலும், வாகனங்களுக்கு காப்பீடு செய்வது சட்டப்படி கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
வாகனங்களுக்கான காப்பீடு மூன்றாம் நபர் பாலிசி, காம்பிரிஹென்சிவ் பாலிசி என இரு வகைப்படும். அதில் காம்பிரிஹென்சிவ் பாலிசி என்பது பல்வேறு பாதுகாப்புகளை உள்ளடக்கியது.
முதலாவதாக மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் என்பது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் சட்டப்படி, கட்டாயமாக எடுத்தே தீர வேண்டிய காப்பீடு. 3-வது நபருக்கு பாதிப்பு அல்லது ஆபத்து ஏற்படும்போது மோட்டார் வாகனச்சட்டப்படி நிவாரணம் அளிப்பதற்கு இந்த திட்டம் உதவும்.
ஒருவர் வாகனம் ஓட்டி செல்வதால் ஏற்படும் விபத்தினால், சாலையில் சென்று கொண்டிருந்த மூன்றாம் நபர், எதிர்பாராத விதமாக உயிர் இழந்தாலோ அல்லது ஊனம் அடைந்தாலோ அந்த நபருக்கு அல்லது அந்த நபரை சேர்ந்தவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் சட்டப்படி நிவாரணம் கிடைக்க இந்த காப்பீட்டு திட்டம் வழிவகை செய்கிறது.
காம்பிஹென்சிவ் காப்பீடு என்பது இந்த பாலிசி எடுத்தவரின் பாதுகாப்பு, உடன் செல்பவரின் பாதுகாப்பு, மூன்றாம் நபர் இன்சூரன்ஸ், வண்டிக்கு சேதம் அடைந்தால், அதற்கான நிவாரணம், வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ, குளிர்சாதன வசதிக்கான கருவிகள் போன்ற கூடுதல் பிட்டிங்குகள் காணாமல் போனாலோ அல்லது வண்டியே காணாமல் போனாலோ அதற்கான நிவாரணம், இப்படி பல்வேறு சூழ்நிலைகளிலும், விபத்துகளிலும் நிவாரணம் கிடைப்பதற்கு இந்த விரிவான பாலிசி வழி செய்கிறது.